கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்- துணைவேந்தர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு 2 நாள் கூட்டம் இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் உரை வருமாறு:-

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது.

2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக்குள் உள்ளன. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.

பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்விக்கு பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு; ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனை.

அதுமட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் 1,553 கல்லூரிகள் 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

தொழிற்கல்வியிலும், மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அதோடு, தொழிற்கல்வி மற்றும் மருத்துவப் படிப்பில் சேர “நுழைவுத்தேர்வு” கட்டாயம் என்பதை ஒழித்துக் கட்டி, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் அளவில் மேற்படிப்பில் இடம் கிடைக்கச் செய்தவர் கலைஞர்.

மாணவியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

இத்தனை ஆண்டுகளும் இல்லாத வகையில், உயர் கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதிகளவிலான நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, தொடக்கத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தொழிற்கல்வியிலுள்ள பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திறன் சார்ந்த கல்வியும் பயிற்சியும் பாடத்திட்டங்களில் கட்டாயப்படுத்துதல் அவசியம். அதனால்தான், மார்ச் 1 அன்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தை மாணவச் செல்வங்களுக்காகத் துவங்கி வைத்தேன்.

பல்கலைக்கழகத்தின் தரத்தையும் செயல்பாட்டையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுவோர் துணைவேந்தர்கள்தான். நீங்கள் அனைவரும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.

மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக் கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்.

இந்த மாபெரும் மாநாடு தன் நோக்கங்களில் வெற்றி பெறவும் அதன் மூலம் நமது நாட்டின் உயர்கல்வி மேன்மை பெற வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் நிலையான முன்னேற்ற குறிக்கோள்களை அடைய இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் மூலமாக அனைவருக்கும் தரமான, சமமான கல்வி, உறுதியான கல்வி என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் தென் மண்டலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள் பங்கேற்று விவாதித்தனர். உயர் கல்வியில் உள்ள சவால்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு தேவையான கல்வியை அளித்தல், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷினை புகுத்துதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்லாந்து நாட்டில் உயர் கல்விக்கு கட்டணம் இல்லை. இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படுத்த தேவையான வி‌ஷயங்கள் குறித்தும் துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம், பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல் மற்றும் தென்மண்டலத்தை சேர்ந்த 100 துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் நாளையும் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.