உக்ரைன் ராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- மரியுபோல் நகரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை தாக்கி வருகிறது. 
தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மரியுபோல் மீது ரஷிய படைகள் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், அந்நகரத்தில் 22 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
ரஷியப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து குண்டு வீசி வருகின்றன.இதனால் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை
மரியுபோலில் மட்டும் சுமார் 2,100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மேலும் அங்கு குடிநீர், உணவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.மொபைல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் 40 ஆயிரம் பேர் அந்நகரில் சிக்கியுள்ளனர்.
இதனிடையே, மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் ராணுவ பயிற்சி மைதானத்தின் மீது  ரஷிய போர் கப்பல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 
இந்த பயிற்சி மையம்  உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் பிற கூட்டணி நாடுகளின் ராணுவ பயிற்சியாளர்கள் மூலம் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படைள் கொல்லப் பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கூலிப்படையாகக் கருதப்படும் வெளிநாட்டினர் கொல்லப்படுவது தொடரும் என்றும் ரஷியா கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.