பலருக்கும் பாடம் கற்றுத்தந்த 'ராதேஷ்யாம்'

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ராதேஷ்யாம்' படம் பாக்ஸ்ஆபிஸில் தோல்வியடைந்துவிட்டது. எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இல்லாமல் ஐந்து மொழிகளிலும் தோல்வியடைந்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தப் படம் 'பிரம்மாண்டம், பிரம்மாண்டம்' என்று படமெடுத்து வரும் சில பல இயக்குனர்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டதாகவே திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். பிரம்மாண்டம் மட்டும் ரசிகர்களைக் கொண்டு வந்துவிடாது. மேலும், ஒரு பெரிய ஹீரோவால் கூட தனித்து நின்று தன்னுடைய படத்தைக் காப்பாற்ற முடியாது என்று பிரபாஸுக்கும் இந்தப் படம் பாடம் கற்றுக் கொடுத்துவிட்டது என்றுதான் பலரும் சொல்கிறார்கள்.

200 கோடி, 300 கோடி பட்ஜெட் என்று சொல்லி சில படங்களை தற்போது எடுத்து வருகிறார்கள். அந்தப் படங்களுக்கெல்லாம் பட்ஜெட் முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்த 'ராதேஷ்யாம்' ஒரு எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது என்பதே பலரது கருத்து.

அடுத்து பிரம்மாண்டமாக வெளியாக உள்ள'ஆர்ஆர்ஆர்' படக்குழுவே கொஞ்சம் அச்சத்தில் உள்ளதாகவும் டோலிவுட்டில் சொல்கிறார்கள். மற்ற பிரம்மாண்டப் படங்களை இயக்கி வருபவர்களும் இந்நேரம் தங்களது கதை, திரைக்கதை, காட்சிகளை மீண்டும் ஒரு முறை நன்றாக அலசி, ஆராய்ந்து பார்க்கட்டும் என அனுபவசாலிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.