ஜம்மு – காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகளில் ஒருவன் செய்திச்சேனல் நடத்தி, பயங்கரவாதியாக மாறியவன்!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகரில் அதிகாலை நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஜய்குமார் கூறுகையில், ‘கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் டிஆர்எப் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சமீபத்திய பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ரயீஸ் அகமது பட். பத்திரிகையாளரான இவர் அனந்த்நாக்கில் ‘வேலிநியூஸ் சர்வீஸ்’ என்ற ஆன்லைன் செய்தி இணையதளத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் பயங்கரவாத குற்றங்களுக்காக ரயீஸ் அகமது பட் மீது ஏற்கனவே இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவன் பிஜ்பெஹாராவைச் சேர்ந்த ஹிலால் அஹ் ரா என்பது தெரியவந்துள்ளது’ எனக் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.