பொது நுழைவுத்தேர்வை கண்டித்து திருவாரூரில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ அறிவிப்பு

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஜூலை மாதம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது, பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது. மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் பொது நுழைவுத்தேர்வை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம் மாநில கல்வி முறையை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இதைக் கண்டித்து, தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருவாரூரில் மதிமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.