'பிரதமரிடம் மன்னிப்புக் கேட்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணமா?' – எடப்பாடி எழுப்பும் கேள்வி

சென்னை: ‘பல்வேறு சிக்கல்களில் மாட்டியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து மன்னிப்புக் கேட்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளரா’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்குவாரா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (‘இன்ப’) சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 அன்று திறந்து வைத்துள்ளார். பொருட்காட்சியின் நிறைவு நாள் நெருங்கி உள்ளதால், பல அரங்கங்கள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று ஆட்சியில் இல்லாதபொழுது ஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரானவுடன், தமிழக வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டு வரும் வகையிலான அரசு முறைப் பயணம் என்று தம்பட்டம் அடித்தார். அரசு முறைப் பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பினேன். உடனே, உடன் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார் விமானச் செலவை திமுக ஏற்றதாக அங்கிருந்தே அறிக்கை விட்டு மழுப்பினார். திமுக செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் சென்றது சட்ட விரோதம் என்று மத்திய அரசுக்கு புகார்கள் போயிருக்கின்றன. இந்நிலையில் நேற்று (30.3.2022) இரவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பறந்திருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து ஊடகங்களும், நாளிதழ்களும், வாரப் பத்திரிகைகளும் விவாதங்கள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளன. ஒரு முதல்வரின் வெளிநாட்டுப் பயண நிகழ்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல், மருமகனும், மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது காலில் விழ, நேற்று இரவு டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வருகின்றன.

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன், தன் தந்தை மு.கருணாநிதி கடைபிடித்த வழியைப் பின்பற்ற மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக மக்கள் கேலி பேசுகிறார்கள். “பூலான் தேவி, சேலை கட்டிய ஹிட்லர்” என்றெல்லாம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை இழிவு படுத்தினார் மு.கருணாநிதி. சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பிக்க 1980களில் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று இந்திரா காந்தியின் காலில் விழுந்தார்.

அதே போல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோ பேக் மோடி (Go Back Modi) என்று கருப்பு பலூன் பறக்கவிட்டவர் மு.க. ஸ்டாலின். திமுகவினர் மேடை தோறும் பிரதமர் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது, “அதிமுகவினர் தங்கள் தலைவியை அம்மா என்றும், மோடியை டாடி என்றும் அழைத்தால், அவர்களுக்குள் என்ன உறவு” என்று, திமுக எம்.பி ஆண்டிமுத்து ராசா, தமிழக மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசினார்.

இதையெல்லாம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மு.க.ஸ்டாலினின் மாய்மாலத்திலும், நாடகத்திலும் மயங்க, நமது பிரதமர் மோடி, இந்திராகாந்தி அம்மையார் அல்ல. சட்ட விரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மை என்றால், உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான, நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்பதை திமுகவினர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.