ஐபிஎல் கிரிக்கெட் : வாணவேடிக்கை காட்டிய ரஸல் ; பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவான் – ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை. ராஜபக்சா 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மாவி பந்துவீச்சில் சௌதீ-யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதை தொடர்ந்து ஷிகர் தவான் 16 ரன்களில் சௌதீ பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய  லிவிங்ஸ்டன் 19 ரன்களில் வெளியேறினார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஷாருகான் மற்றும் ராகுல் சஹர் டக் அவுட்டாகி வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி நேரத்தில் வாணவேடிக்கை காட்டினார்.
அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 138 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே 12 ரன்கள் மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கி சிறப்பாக விளையாட தொடங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 9  ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஆனால் ஆட்டத்தின் 12-வது ஓவரை வீச வந்த ஓடின் ஸ்மித் 30 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய கொல்கத்தா வீரர்கள் ரஸல் – பில்லிங்ஸ் சிக்சர் மழை பொழிந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரஸல் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
 கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.