வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் : சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 438 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7,788 பேர் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, அதற்கு முந்தைய நாள் பாதிப்புடன் ஒப்பிடும் நிலையில் சற்று அதிகமாகவே உள்ளது.
தொற்று பரவுவதால், 2.6 கோடி மக்கள் தொகை உடைய ஷாங்காய் நகரில் கடந்த வாரம் முதல், இரு கட்டங்களாக ஊரடங்கு அமலானது. இதில் புடோங்கில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்துகள் மற்றும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன், வீடுகளில் இருப்போர் கொரோனா பாதிப்பு குறித்து தினசரி சுய பரிசோதனை செய்து கொள்வதுடன், முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு முழுமையாக இல்லை என்ற நிலை வருவதற்காக, தொடர்ந்து வீடுகளில் அடைத்து வைத்துள்ளதுடன், விதிமுறைகளை கடுமையாக்கி இருப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிகாகோ பல்கலை அரசியல் அறிவியல் பேராசிரியர் டாலி யாங் சமூக வலைதளத்தில் நேற்று கூறி இருப்பதாவது:ஷாங்காயில், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான கொரோனா பரவல் இல்லை. இருப்பினும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமல்படுத்த வேண்டிய ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement