பெங்களூரு : ரயில்வே போலீஸ் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த பாஸ்கர் ராவ், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியலில் குதித்த, கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வரிசையில், இவரும் இணைகிறார்.கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரியான பாஸ்கர் ராவ், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உட்பட, பல்வேறு பதவிகளை நிர்வகித்தவர்.
தற்போது ரயில்வே போலீஸ் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தார். நேர்மையான, திறமையான அதிகாரி என பெயர் பெற்றவர்.இவர் விருப்ப ஓய்வு கோரி, 2021 செப்டம்பர் 16ல், மனு செய்திருந்தார். இவர் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய, மத்திய அரசு கால அவகாசம் அளித்திருந்தது.ஆனால் அவர் முடிவு மாறவில்லை. எனவே இவரது ராஜினாமாவை, கடந்த வாரம்தான் மத்திய அரசு அங்கிகரித்தது.அரசியலில் ஈடுபட விரும்பிய பாஸ்கர் ராவ், எந்த கட்சியில் இணைவார் என, பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். தற்போது, ஆம் ஆத்மியில் இணைய முடிவு செய்துள்ளார்.டில்லியின் தீன் தயாள் உபாத்யாய சாலையில் உள்ள, ஆம் ஆத்மி அலுவலகத்தில், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில், இன்று காலை 11:00 மணிக்கு, பாஸ்கர் ராவ் இணைவார் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
Advertisement