உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காகவே சொத்துவரி உயர்வு அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதில் கொண்டே, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அளித்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப் பட்டது. அதன் மீது பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘தேர்தல் அறிக்கையில் பொருளாதார நிலை மேம்பட்ட பின்னர் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது உயர்த்தியிருப்பது மக்களை பாதிக்கச் செய்கிறது. அதனால், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), நாகை மாலி (மா.கம்யூ), டி.ராமச்சந்திரன் (இ.கம்யூ) சதன் திருமலைக்குமார் (மதிமுக) ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வரி உயர்வு குறித்து பேசியதை சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச் சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டில் சொத்து வரியை உயர்த்த அமைக்கப்பட்ட குழு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் 1.79 சதவீதத்தில் இருந்து 5.02 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது நகர்ப்புற பகுதிகள் 48.3 சதவீதமாக உள்ள நிலையில், வரும் 2036-ல் இது 60 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை கணக்கில் கொண்டு கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது மொத்தமுள்ள 77.86 லட்சம் குடியிருப்புகளில் 44.53 லட்சம் குடியிருப்புகளுக்கு 25 சதவீதம், 19.23 சதவீதம் குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், 1.09 லட்சம் குடியிருப்புகளுக்கு 150 சதவீதம் அளவுக்கு மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு கட்டிடம், இடத்துக்கு சேர்த்து வரி கணக்கிடப்பட்டது. தற்போது கட்டிடத்துக்கு மட்டுமே வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து முதல்வர் பேசியதாவது:

சொத்து வரி உயர்வை அரசு மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறும்போது, அதை சமாளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அதனால், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளைக்கூட நிறைவேற்ற சிரமப்பட்டன.

ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகள் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை அரசிடம் எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில்தான் அடித்தட்டு மக் களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதில்கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளை பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 சதவீதம் மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை. மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அரசின் இந்த முடிவுக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன். மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர் களையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதையடுத்து, சொத்து வரி உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர் களைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர் களும் வெளிநடப்பு செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.