கர்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்: மந்திரி அஸ்வத் நாராயண்

பெங்களூரு:

கர்நாடகத்தில் தொழில்முனைவோர் குறித்து பள்ளி கல்வித்துறை மற்றும் தொழில்முனைவோர் துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார் தலைமையில் ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயல்படை நேற்று ஒரு அறிக்கையை உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணிடம் விதான சவுதாவில் வழங்கியது. இந்த அறிக்கையை பெற்று கொண்ட பிறகு அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோர் உதவி மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து ஒரு பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு முதல் பி.யூ.சி. வரை தொழில் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு, தரமான கல்வியை சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் கற்றலின்போதே தொழில்முனைவு குறித்த மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.