20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50ஆயிரம் மாநில அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டு தல்களையும் வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  கொரோனா இறப்புக்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,

கோவிட்19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ள தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்

மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் (District Revenue Officer) முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

கோவிட் – 19 தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.