'திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடுவதா?' -சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்

திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்புபடுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர்” என்று கூறினார்.
image
இன்றைய தினம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  “புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்களா பாஜக-வினர்? இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை.
இதற்கிடையில் யுவன் சங்கர் ராஜா சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஒன்று திராவிடனாக இருங்க, இல்லையென்றால் தமிழனா இருங்க. ஏன் அதில் குழப்பம்? தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், பின் தமிழன் என்கிறீர்கள்… ஏன் இத்தனை முகமூடி? யுவன் சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை. கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ் கூட தன்னை `பெருமைமிகு கன்னடிகா’ என்றே கூறுகிறார். அதே போல நீங்களும் `பெருமைமிகு தமிழன்’ என்று மட்டும் சொல்ல வேண்டியது தானே? கருப்பா இருந்தால் திராவிடர் என்று பொருளா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக எருமை திராவிடரா? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும்” என்றார்.
சீமானின் கருத்து குறித்து சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வின்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எருமைமாடு கூட கருப்பாக தான் இருக்கிறது, அதற்காக எருமைமாடு திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். பகுத்தறிவு உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமைமாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும். அதை செய்த சீமானுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
image
தொடர்ந்து நீட் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “முதலமைச்சர் எப்போது பார்த்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். முதலில் தேர்தலுக்கு முன் திமுக சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? அதை அவர்கள் ஆராய வேண்டும். ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர். மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் ஆளுநர் பின்பற்ற முடியும். அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம் ஆனால் புறக்கணிக்கக் கூடாது” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை: சாலை வரியை அதிகரிக்கும் டெல்லி அரசுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.