அமைதி பேச்சுவார்த்தை- உக்ரைனின் பதிலுக்காக காத்திருக்கும் ரஷியா

மாஸ்கோ:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷியா தனது கோரிக்கைகள் அடங்கிய வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கை மீது உக்ரைனின் பதிலுக்காக ரஷியா காத்திருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். வரைவு அறிக்கை குறித்த விரிவான விவரங்களை பெஸ்கோவ் தெரிவிக்கவில்லை. 
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டிய பெஸ்கோவ், உக்ரைன் அரசு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து தொடர்ந்து விலகுவதாகவும், பேச்சுவார்த்தை செயல்முறையை தீவிரப்படுத்த பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை என்றும் கூறினார்.
உக்ரைன் கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போது தனது வரைவு அறிக்கையை ரஷியாவிடம் வழங்கியது. அதன்பிறகு இரு தரப்பினரும் எந்த அளவிற்கு பேசிக் கொண்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.