கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் 6 மணிநேரம் விசாரணை – நடந்தது என்ன?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து சசிகலாவிடம் 6 மணி நேர காவல்துறை விசாரணை நடைபெற்றது. சசிகலாவிடம் நாளையும் விசாரணை தொடர்கிறது. விசாரணை வளையத்திற்குள் நடந்தது என்ன? அது குறித்த செய்தி தொகுப்பு. 
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மனோஜ், சயான் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017-ம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிப்புரிந்து வந்த தினேஷ், தற்கொலை செய்து கொண்டது என அடுத்தடுத்து பல சந்தேகங்களும் மர்ம முடிச்சுகளாக இருந்தது இந்த வழக்கு.
image
இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக மறு விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். மேற்கு மண்டல காவல் துறை ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோட நாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 217 பேரிடம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், கோட நாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவரான ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். வயது மூப்பின் காரணமாக ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரிடையாக விசாரணை முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் இன்று காலை 10.55 மணியளவில் ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி மாவட்ட காவல்துறை எஸ்பி ஆஷித் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, பெண் டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளர், டைப்பிஸ்ட், குற்றப்பிரிவு காவலர் உட்பட 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.
image
கோட நாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சசிகலா சிறையில் இருந்ததால், இந்த தகவலை அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் அளித்து வந்ததால் அவரும் விசாரணையின் போது உடன் இருந்தார். சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை சசிகலாவிடம் ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
*கோடநாடு பங்களாவில் என்ன ஆவணங்கள், பணம், நகைகள், பொருட்கள் என்னென்ன இருந்தது?
* கோட நாடு பங்களாவில் பணிஅமர்த்த ப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர்? யார் மூலம் வேலையாட்கள் அமர்த்தும் காண்டிராக்ட் கிடைத்தது?
* கொள்ளை, கொலை சம்பவம் எப்போது யார் மூலம் உங்களுக்கு தெரிந்தது? யார் முதலில் உங்களிடம் சொன்னார்கள்?
* பங்களா மேலாளர் நடராஜன் ஏற்கனவே அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
* சாலை விபத்தில் இறந்து போன கனகராஜ், தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் தினேஷ் குமார் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்.
* மேலாளர் நடராஜனுக்கு என்னென்ன பணிகள் கொடுக்கப்பட்டிருந்தது? கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு நடராஜனை தொடர்புகொண்டீர்களா?
image
* கடைசியாக கோட நாடு பங்களாவிற்கு எப்போது சென்றீர்கள்?
* உங்களுக்கு யார் யார் மீது சந்தேகம்?
* வேறு யாருக்கு பங்களாவில் உள்ள ஆவணங்கள் பணம் நகைகள் பொருட்கள் என்னென்ன இருக்கிறது தெரியும்?
* கோடநாடு எஸ்டேட்டில் இருந்த நில பத்திரங்கள், பணம், நகை பொருட்கள் என்னென்ன?
* கொள்ளை சம்பவத்திற்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்ன என்பது தெரியுமா?
* எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த நபர்கள் யார்? உள்பட பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை விசாரணை நடந்தது. பிறகு விசாரணைக்கு வந்த காவல்துறையினர் அனைவரும் உணவு சாப்பிட வெளியே சென்று விட்டனர்.
image
பிறகு மீண்டும் பிற்பகலில் 2.30 மணிக்கு தொடங்கியது. இதன் பிறகு மாலை 5.15 மணி வரை விசாரணை நடந்து முடிந்தது. இதையடுத்து ஐஜி சுதாகர் தலைமையிலான காவல்துறையினர் வெளியே வந்தனர்.
நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சசிகலாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு சசிகலா முழுஒத்துழைப்பு வழங்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் முடியாத சூழ்நிலையில் நாளையும் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அடுத்தக்கட்டமாக யாருக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.