இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமேஸ்வரம்:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேசமயம் இலங்கையில் வாழவழியில்லாத மக்கள்  அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து 3 குடும்பத்தை சேர்ந்த 13 பேர்  படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அதேபோல யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர். 
ஒரே நாளில் 5 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தமிழகம் வந்துள்ள அவர்கள் தங்கள் வாழ்வை குறித்து கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.