சிக்சர் மழை பொழிந்த ஜாஸ் பட்லர்- டெல்லி அணிக்கு எதிராக 222 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். இருவரும் விரைவாக அரை சதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்த நிலையில், படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 35 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்திருந்தார்.
மறுமுனையில் ஜாஸ் பட்லர் சதம் கடந்து அசத்தினார். 57 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். 
அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள், ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 1 ரன் சேர்க்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. 
டெல்லி தரப்பில் கலீல் அகமது, முஷ்பிகுர் ரகிம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.