பிரதமர் மோடியுடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை- இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி:
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். 
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் மத்திய மந்திரிகள் உள்பட இரு தரப்பிலும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.
 
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தின.  
இந்தியா-இங்கிலாந்து பேச்சுவார்த்தை
பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். 
அப்போது பேசிய போரிஸ் ஜான்சன்,  இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது என்றார். எல்லா வகையிலும் எங்கள் உறவை வலுப்படுத்த இது உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு மற்றும் நட்பு நமது காலத்தில் மிகச் சிறந்து ஒன்று என்றும் அவர் கூறினார். 
எதேச்சதிகார நாடுகளின் அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இந்தியாவுடன் இங்கிலாந்து வைத்துள்ள கூட்டணி, கடலில் புயல் நடுவே சிக்கிய போது கிடைக்கும் ஒரு விளக்கு போன்றது என தெரிவித்தார்.
காற்று, விண்வெளி மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் இணைந்து போராடுவது குறித்து இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும், இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாக வைத்திருப்பதில் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.   
இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுதந்திரம் பெற்று நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் காலத்தில், இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை தந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்தார். 
உக்ரைனில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளும் பிரச்சனைக்குத் தீர்வுகாண தூதரக ரீதியான நடவடிக்கை மற்றும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.