பெங்களூரு அணியை 68 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பீல்டிங்கைத் தேர்வு  செய்தது. 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் மார்கோ ஜான்சன்.
சற்று தாக்குப்பிடித்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களும், பிரபுதேசாய் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 16.1 ஓவர் தாக்குப்பிடித்த பெங்களூரு அணி 68 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஜெகதீசா சுசித் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.