இலங்கை பொருளாதார நெருக்கடி | பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை0 ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் விதமாக போலீஸார் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதேபோல,மாணவர்களை பிரதமர் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களை தள்ளி விட்டு மாணவர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது சுவரின் மீது ஏறிநின்று மாணவர் ஒருவர் நீங்கள் சாலைகளை மறிக்கலாம் ஆனால் முழு அரசாங்கமும் வீட்டிற்கு போகும் வரை எங்களின் போராட்டத்தை நிறுத்த முடியாது” என்று கூறினார். இந்த போராட்டத்தின் போது மாணவர்களில் சிலர் “கோ ஹோம் கோடா” என்ற பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். இதுகுறித்து இலங்கை போலீஸார் கூறும் போது, “ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்த வளாகத்தில் இல்லை என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அமைதியாக கலைந்து விட்டனர் என்றும் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அலுவகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டு, அதிபர் கோத்தபய ராஜபக்சவும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலகக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், மத்திய நகரமான ரம்புக்கனாவில் நடந்த சாலைமறியலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இலங்கையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சுற்றுலாத் துறை முடங்கியது. இதனால் அந்நாட்டின் வருவாய் சரிந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததாலும், கடன் நெருக்கடியாலும் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குகூட நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று வெள்ளிக்கிழமையன்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.