மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை:
நடிகை மீரா மிதுன் நடித்த பேயை கானோம் என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில்  கடந்த மார்ச் 16 ஆம் தேதி  தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குநர் மற்றும் முதல் அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகை மீரா மிதுன் மனுதாக்கல் செய்திருந்தார். 
அந்த மனுவில், ஆடியோ பதிவுசெய்யபட்ட தினத்தில் தான் ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை மீராமிதுன் அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், தற்போது முதல் அமைச்சர் மீது அவதூரு பரப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதனால், மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 
காவல்துறை தரப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மீராமிதூன் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அவரை கைதுசெய்து விசாரிக்கவும், அவர் பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறைக்கு கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.