பெங்களூரு:”அரசு பணிகள், 50 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், அவற்றைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மையிடம், கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அரசு மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய, அமைச்சர் ஈஸ்வரப்பா, 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கூறி, உடுப்பியில், தனியார் லாட்ஜ் ஒன்றில், ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் கர்நாடக அரசியலிலும், அரசு பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர் மத்தியிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மையை, கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.’ஒவ்வொரு அரசு பணிக்கும், தனி டெண்டர் அறிவிக்க வேண்டும். அரசு துறைகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முறையைத் தடுக்க வேண்டும். அரசு துறைகளில் நிலவும் 40 சதவீத கமிஷனை கட்டுப்படுத்த வேண்டும்’ என, முதல்வரிடம் கேட்டு கொண்டனர்.
பின், சங்க தலைவர் கெம்பண்ணா கூறியதாவது:கர்நாடகாவில் உள்ள அனைத்து துறைகளிலும், அரசு பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் லஞ்சமாக கேட்கப்படுகிறது. மே 11ல் மாநில அளவிலான ஒப்பந்ததாரர்களின் கூட்டம் நடத்தி, எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்போம்.
எங்களின் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால், அது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். மாநிலத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் கூறியுள்ளோம்.
40 சதவீதம் கமிஷன் லஞ்சம் ஒழிக்க வேண்டும்.ஒப்பந்ததாரர்களின் பில் தொகையை சரியான நேரத்தில் விடுவிக்க வேண்டும்; ‘பேக்கேஜ்’ முறையை ரத்து செய்து, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், தொகையை ‘செட்டில்’ செய்ய வேண்டும்.
இது போன்ற சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம்.இதற்கு முதல்வரும் சாதகமாக பதிலளித்துள்ளார். ஏற்கனவே நிர்ணயித்த மதிப்பீட்டை, மீண்டும் மாற்றி அதிகம் மதிப்பிடுவது, ஊழலுக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement