மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாள்- உள்துறை அமைச்சகம் கடிதம்

புது டெல்லி:
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
‘உடனடியாக’ என குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும். இதன் நோக்கம் நம் இளையர்களை பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அந்நியப்படுத்துவதே ஆகும். பயங்கரவாதத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், அது எப்படி தேச நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் விளக்கி கூற வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும்.
மே 21-ஆம் தேதி சனிக்கிழமை வருவதால் பெரும்பாலான மத்திய அரசு அலுவலங்கள் விடுமுறையில் இருக்கும். அவர்கள் மே 20-ஆம் தேதி உறுதி மொழி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.