கேரளாவை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்:

எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்தது.
இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு  8.22 ரூபாய் குறைந்து 102.63 காசுகளுக்கும், டீசல் 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41ம் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36ம் குறைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) லிட்டருக்கு 2.48 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.16 ரூபாயும் குறைத்துள்ளது.

இதன் மூலம், மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.48 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.16 குறைந்துள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகளை பின்பற்றி மேலும் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்…மக்களை முட்டாளாக்காதீர்கள் – பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.