ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி

டெஹ்ரான்:
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 மோப்ப நாய் குழுக்களும், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் 7 மீட்பு வாகனங்களும் சென்றன.

அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் வசித்த குடியிருப்புவாசிகள் நகர அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஈராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்த அந்த நகரில் இருந்த கட்டிடத்தில் வணிகத்திற்கான கடைகள் அமைந்துள்ளதுடன், குடியிருப்புவாசிகளும் வசித்து வந்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.