ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:
ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தைச் (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார்.
இன்று காலை ஆசிரியை ராஜ்னி பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ராஜ்னியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் இம்மாதத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.