திமுக -3, அதிமுக -2, காங்கிரஸ் -1 – மாநிலங்களவை தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக -3, அதிமுக-2, காங்கிரஸ்-1 மற்றும் சுயேச்சைகள் 7 என மொத்தம் 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 1-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

அப்போது, அரசியல் கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை திரும்பப்பெறுவதற்கான அவகாசம் நேற்றுமாலை 3 மணியுடன் முடிவடைந்தது. யாரும் மனுக்களை திரும்பபெறவில்லை. இதையடுத்து மனுதாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), அ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக), ஆர்.எஸ்.பாரதி (திமுக), எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (அதிமுக), விஜயகுமார் (அதிமுக), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (திமுக) ஆகிய உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 29-ம்தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 13 வேட்பாளர்களிடம் இருந்து 18 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

சு.கல்யாணசுந்தரம் (திமுக) இரா.கிரிராஜன் (திமுக), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (திமுக), சி.வி.சண்முகம் (அதிமுக), ஆர்.தர்மர் (அதிமுக), ப.சிதம்பரம் (காங்கிரஸ்) மற்றும் சுயேச்சைகள் அக்னி ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, எஸ்.தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல் முருகன் சோழகனார் ஆகியோர் மனு அளித்திருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனையில் 6 வேட்பாளர்களின் மனுக்கள் செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டன. காலியிடங்கள் 6 ஆகவும், போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 6 ஆகவும் இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, திமுகவை சேர்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 6 பேரும் தங்களது வெற்றிச் சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரான பேரவைச் செயலர் கி.சீனிவாசனிடம், நேற்று மாலை பெற்றுக்கொண்டனர். ப.சிதம்பரத்துக்குப் பதில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.