ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்திய பாகிஸ்தான்

இஸ்லமாபாத்:

பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது.

இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை விடுவிக்கவும், கூடுதலாக 200 கோடி டாலர் கடன் வழங்கவும் கோரி சர்வதேச நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை நீக்கி, விலையை உயர்த்துமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக பாகிஸ்தான் உயர்த்தியது. இந்தநிலையில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு தலா 30 ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்) அதாவது 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 209.86- ஆக உள்ளது. டீசல் விலை 204.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணென்னெய் விலை லிட்டருக்கு 181.94 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.