இஸ்லாமத்துக்கு விரோதமாக பாஜக நிர்வாகிகள் பேசியதை வெளிநாடுகள் கண்டித்ததால் அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது: ப.சிதம்பரம் சாடல்

டெல்லி: இஸ்லாமத்துக்கு விரோதமாக பாஜக நிர்வாகிகள் பேசியதை வெளிநாடுகள் கண்டித்ததால் அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள்நாட்டு விமர்சனங்கள் இரண்டு செய்தி தொடர்பாளர்களுக்கும் எதிராக செயல்பட பாஜகவை தூண்டவில்லை. சர்வதேசப் பின்னடைவுதான் பாஜகவை நடவடிக்கை எடுக்கத் தள்ளியது என்று கூறியுள்ளார். இஸ்லாமியத் விரோதக் கருத்தை முதலில் விதைத்தவர்கள் நுபுர் சர்மாவோ, நவீன்குமாரோ அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார். நுபுர் சர்மாவும், நவீன்குமாரும் இஸ்லாமோஃபோபியாவின் அசல் படைப்பாளிகள் அல்ல; அவர்கள் தங்கள் எஜமானர்களை விட கூடுதல் விசுவாசத்தை காட்ட முயன்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.  பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கி உள்ளது நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.