குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சமூக குற்றம் – குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்வர் கருத்து

சென்னை: சொற்பத் தொகைக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தீவிர சமூக குற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டாம்பூச்சிகள்போல சிறகடித்துப் பறந்து மகிழும் குழந்தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களோடு கதை பேசிக்களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்றுப்பெறும்.

குழந்தைகளுக்கு அநீதி

குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி, சொற்பத் தொகைக்காக அவர்களது பொன்னான எதிர்காலத்தை பாழ்படுத்தி அவர்களது குழந்தைத் தனத்தை திருடுவது தீவிர சமூக குற்றம். வனத்தில் வளர வேண்டிய தேக்கு மரத்தை தொட்டியில் வளர்ப்பதுபோல, அவர்களது சிறகுகளை கத்தரித்து, சுதந்திரத்தை பறித்து, குழந்தை தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.

ஒவ்வொரு குழந்தைக்கும் அளவற்ற ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை கல்வியின் மூலமாகவும், மற்றவர்களோடு பழகி கற்றுக்கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும்போதுதான், மானுடத்துக்கு மகத்தான கடமைகளை ஆற்ற முடியும். குழந்தை தொழிலாளர் முறை அனைத்து வகைகளிலும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

குழந்தை தொழிலாளர்களை உருவாக்கி, அவர்களது வியர்வையை சுரண்டி சிலர் வளம்பெறுவதற்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க தமிழக அரசு அயராது பாடுபடுகிறது. தகவல் கிடைத்தால் விரைந்து செயல்பட்டு, பணியில் அமர்த்தப்பட்ட குழந்தைகளை மீட்டு, மீண்டும் கல்வியைத் தொடரச் செய்கிறது. குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக கட்டணமின்றி புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, மதிய உணவில் முட்டையோடு ஊட்டச்சத்து உணவு, கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து வசதி என எண்ணற்ற உதவிகளை அரசு வழங்குகிறது.

‘எங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம்’ என்று பெற்றோரும், ‘குழந்தைகளை பணிக்கு அமர்த்தமாட்டோம்’ என்று மற்றவர்களும் உறுதியேற்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, எங்காவது ஒருகுழந்தை பணிக்கு அமர்த்தப்பட்டாலும், அரசுக்கு தகவல் தர வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.