'ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்' – எச்சரிக்கை வாசகத்தை சிகரெட்களில் அச்சடிக்கும் கனடா; உலகிலேயே முதல் முறை

ஒட்டாவா: சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா. இதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள முதல் நாடாக திகழ்கிறது கனடா.

உலக அளவில் சிகரெட் பிடிப்பதனால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை அந்தப் பொருட்களில் படங்களாக அச்சிட்டு, விற்பனை செய்து வருகின்றன.

இந்தியாவில் இந்த நடைமுறை கிட்டத்தட்ட சுமார் 10 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இந்த எச்சரிக்கை நடவடிக்கை மக்களிடையே இப்போது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கலாம் என்ற காரணத்தினால் மாற்று முயற்சியை முன்னெடுத்துள்ளது கனடா அரசு. அதன்படி, ஒவ்வொரு சிகரெட்டிலும் சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை அச்சடிக்க கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது கனடா.

‘ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்’ என்ற வாசகத்துடன் சிகரெட்டை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது கனடா. இது சிகரெட்டை அடிக்கடி பயன்படுத்துபவர்களை எச்சரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2023-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது கனடா. அதன்மூலம் உலகிலேயே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள முதல் நாடாக மாறியுள்ளது அந்நாடு. கனடாவில் 10 சதவீத மக்கள் ரெகுலராக சிகரெட் பிடித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதை வரும் 2035 வாக்கில் பாதியாக குறைக்க விரும்புகிறது அந்த நாட்டு அரசு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.