4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த ராணுவப்பணி… 45 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க திட்டம்…..

அக்னிப்பாதை என்ற திட்டத்தின் அடிப்படையில் முப்படைகளிலும் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே, ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, கடற்படை அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் அக்னிபாதை என்ற புதிய ஆள்சேர்ப்பு திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டனர்.

17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் என ராணுவத்தில் சேர்ப்பதே அக்னிப்பாதை திட்டமாகும். அதன்படி, அக்னிவீர் என்ற படைப்பிரிவில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு ராணுவத்தில் பணியாற்றுவார்கள். ராணுவத்தில் இளைஞர்கள் சேர இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

4 ஆண்டு கால ஒப்பந்த பணியில் சேரும் வீரர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் காப்பீடு ஆகியவை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகள் மட்டத்தை தவிர ஏனைய அனைத்துப்பிரிவுகளிலும் இந்த தற்காலிக ஆள்சேர்ப்பு நடைபெறும். 6 மாத பயிற்சி காலத்துடன் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இந்த ஒப்பந்த வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணி முடிந்ததும் 25 சதவீத வீரர்கள் நிரந்தர சேவையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்.

எஞ்சியுள்ள 75 சதவீத ஒப்பந்த பணி வீரர்களுக்கு சேவா நிதியுதவியுடன், திறன் சான்றிதழ், தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு அவர்களது இரண்டாவது பணியை மேற்கொள்ள வகை செய்யப்படும். முப்படை வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்த பணி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.