President Polls: மம்தா கூட்டத்தில் பங்கேற்கும் காங். – டெல்லியில் நாளை முக்கிய முடிவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அறிவிக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்தத் தகவலை, சரத் பவார் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில், டெல்லியில் நாளை, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலத ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், சரத் பவாரும் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கக் கூடிய வகையில், பொது வேட்பாளரை களமிறக்கும் பணிகளில், எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளாளுக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில், ஒரே திசையில் பயணிப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.