மும்பையை மிரட்டும் கனமழை – 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்த கன மழை காரணமாக, பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

தாழ்வான பகுதிகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் சில வழித்தடங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கண்ட இடங்களில் வெள்ள நீரை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை முதல் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வீரர்கள் மும்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை நிலவரம் குறித்து, தலைமைச் செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவாவுடன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்துரையாடினார். மேலும், அதிகாரிகள் விழிப்புடன் இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.