எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு உள்ள அதிமுகவிற்கு நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொண்டர்களால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் பொதுச் செயலாளராக வருவார்.
அதிமுகவை பொருத்தவரை யாரையும் நம்பி இருக்கின்ற இயக்கமல்ல. தொண்டர்களை நம்பி இருக்கின்ற இயக்கம். பெரும்பாலான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு உள்ளது. அதேபோல அதிமுகவிற்கு நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம் என தெரிவித்துள்ளார்.