ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மனைவி சாந்தி தன்னுடைய 3 குழந்தைகளுடன் சிங்கனேந்தலில் வசித்து வந்தநிலையில், சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் சகோதரர் முறை கொண்ட கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி திடீரென சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். அப்போது மனைவியின் திருமணம் மீறிய உறவை அறிந்து அவரைக் கண்டித்துள்ளார்.
அதன் காரணமாக ஆத்திரமடைந்த சாந்தி, திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் பிச்சைக்கனியை கலைமோகன், பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடந்த மே மாதம் 25-ம் தேதி பிச்சைக்கனியை மது குடிக்கவைத்த சாந்தி, பின்னர் இருவருடன் சேர்ந்து அவரைக் கொலைசெய்து உடலைக் காட்டுப் பகுதியில் வீசியிருக்கிறார்.
இது தொடர்பாக பிச்சைக்கனியின் அப்பா ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் அடிப்படையில், ராமநாதபுரம் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். அதில் பிச்சைக்கனி கொலைசெய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக கலைமோகனைக் கைதுசெய்து கொலைசெய்யப்பட்ட பிச்சைக்கனி உடலை மீட்டனர்.
கலைமோகன் கைதுசெய்யப்பட்டதை அறிந்து சாந்தி தலைமறைவானார். அவரைத் தேடி வந்த தனிப்படையினர், ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரைவை கிராமத்தில் அவரது தோழி வீட்டில் தங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் படி அங்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சாந்தி குழந்தைகளுடன் அந்தமான் தப்பிச் செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மதுரைக்கு விரைந்த தனிப்படை போலீஸார் விமான நிலையத்தில் வைத்து சாந்தியைக் கைதுசெய்து ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்றொரு குற்றவாளியான பார்த்திபன் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
துரிதமாகச் செயல்பட்டு முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பாராட்டினார்.