வெளிநாட்டு இருக்கைகளில் பேராசிரியர் நியமனம் – தமிழ் மொழியை புறக்கணிக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில்,போலந்தின் 2 வருகை தரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் நிறுவனத்தில், 1970-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் மூலம் தேர்வாகும் இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்குமிடங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

சம்ஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிகபட்சமாக இந்தி, அடுத்த நிலையில், சம்ஸ்கிருதமும் உள்ளன.

இந்தப் பட்டியலில் தமிழுக்காக வெறும் 2 இருக்கைகள், போலந்து நாட்டில் உள்ளன. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் இவை அமைந்துள்ளன. இவற்றுக்கு, கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கடந்த 2015-ல் கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெய கிருஷ்ணனை ஐசிசிஆர் தேர்வு செய்தது. ஆனால் அவரையும் போலந்து அனுப்பவில்லை. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வார்ஸா தமிழ் இருக்கையில் வருகை தரு பேராசிரியராக பணியாற்றிய ஜி.பாலசுப்பரமணியன் கூறும் போது, “இந்தி, சம்ஸ்கிருதத்தை விடப் பழமையானதும் பல வெளிநாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள தமிழுக்கு போலந்தில் மட்டும் 2 இருக்கைகள் உள்ளன. அதற்கு கூட பல ஆண்டுகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்படாதது வருந்தக் கூடியது. போலந்தின் மாணவர்கள் தமிழைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்கள். எனவே, உடனடியாக ஐசிசிஆர் பட்டியலில் தமிழை சேர்ப்பதுடன் மேலும் பல வெளிநாடுகளில் இதற்காக இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

வார்ஸா பல்கலைக்கழகத்தில் 48 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் தமிழ் இருக்கை உள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது. தொடக்கக் காலங்களில் போலந்து இருக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியருக்கு 3 ஆண்டுக்கு மேல்பணி வாய்ப்பு கிடைத்தது. இதில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தங்கும் இடமும், உணவும் போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. பிறகு பேராசிரியரின் குழந்தைகளுக்கானச் செலவு குறைக்கப்பட்டது அடுத்து பணிக் காலம் ஓராண்டானது, பின்னர் 9 மாதமாக குறைக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சினை, இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப் பிரிவுகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.