தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு – பரோட்டா மாஸ்டர் கொலை; 3 பேருக்கு அரிவாள்வெட்டு!

தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள காமராஜ் நகரில் ராஜ் நைட் கிளப் என்ற பெயரில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி, இரவு சுமார் 10 மணியளவில் கற்குவேல், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர், பரோட்டா சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரோட்டா சாப்பிட்டு, பார்சலும் வாங்கியுள்ளனர். ஆனால், பார்சலுக்கான காசு கொடுக்காமல் புறப்பட்டிருக்கிறார்கள். அப்போது கடையின் உரிமையாளரான கருப்பசாமி பார்சலுக்குகான பணத்தைக் கேட்டுள்ளார். மது போதையில் இருந்த 4 பேர் கொண்ட குழு, பார்சலுக்கு பணம் தர முடியாது எனக் கூறி, கருப்பசாமியை ஒருமையில், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கு மத்தியில் வாக்குவாதம் ஆகியுள்ளது.

புரோட்டா கடை

இந்தச் சூழலை சமாளிக்க, பரோட்டா மாஸ்டர் செந்தில்முருகன், புரோட்டா கடையின் ஊழியர்களான தேவராஜ், சாமுவேல் மற்றும் அப்பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வந்த பழனிமுருகன் ஆகியோருக்கு குரல்கொடுத்துள்ளனர். ஆனால், மதுபோதையில் இருந்தவர்கள், அவர்களிடமும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகவும், அதனால் அந்த நான்கு பேரையும் கடையின் ஊழியர்கள் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவில் சுமார் 11.45 மணிக்கு கடையை அடைத்துவிட்டு செந்தில் முருகன், ஊழியர்கள் 2 பேர், ஆவின் பாலகம் நடத்தி வந்த பழனிமுருகன் ஆகியோரும் பைக்கில் வீட்டிற்குக் கிளம்பினர்.

படுகாயமடைந்தவர்

அவர்கள் ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர். இதில், பரோட்டா மாஸ்டர் பொன்செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

தூத்துக்குடி காவல்நிலையம்

இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்.பி பாலாஜி சரவணன், டி.எஸ்.பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக புதுக்குடியைச் சேர்ந்த கற்குவேல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 4-பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.