சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சீரிய முயற்சியால் பெருமளவிலான மழை பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்பு தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெருமழை காரணமாகவும் காவேரி நதிநீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் பாதிக்கப்படக் கூடிய ஒன்பது மாவட்டங்களில் பேரிடர் முன்னெச்சரிக்கை பணிக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அணைகள் திறக்கப்படுகிறது. நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ஒன்பது மாவட்டங்களில் 53 நிவாரண முகாம்கள் மூலம் 6109 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 4 முகங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உடனுக்குடன் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்து கொண்டிருக்கிறது.
பெருமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் 11 குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் 348 வீரர்கள் 9 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது
முன்னறிவிப்பின்றி அணைகளை திறந்து விடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக உயிர் சேதம் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் வழங்கியுள்ளார். முதல்வரின் சீரிய முயற்சியால் பெருமளவிலான பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது
ஆற்று ஓரங்களில் இருக்கக்கூடிய குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளனர். சாலை ஓரங்களில் மின்கம்பம் மற்றும் மரங்கள் சாய்வது உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளப் பகுதிகளில் பொதுமக்கள் செல்பி புகைப்படங்கள் எடுப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.