பெங்களூரு: கொலை குற்றவாளி ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஓட்டலில் அறை போட்டு கொடுத்த 3 போலீசார் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ெகாலை குற்றவாளியான பச்சாகான் (55) என்பவர் பல்லாரி சிறையில் 20 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர் சமீபத்தில் தார்வாருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு 3 போலீசார் காவலுக்கு வந்தனர். போலீசார் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மீண்டும் பல்லாரி சிறைக்கு அழைத்து செல்ல தயாராகினர்.
அப்போது, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அனுமதிக்கும்படி போலீசாரிடம் பச்சாகான் கேட்டான். அதற்கு அந்த போலீசாரும் அனுமதித்தனர். ஒரு ஓட்டலில் அறையும் எடுத்து கொடுத்துள்ளனர். பின்னர், பெங்களூருவில் இருந்து தார்வாருக்கு பெண் தோழி வந்து பச்சாகானுடன் இருந்துள்ளார். அதுவரை போலீசார் அறைக்கு வெளியே காவலுக்கு நின்றனர். இது குறித்து தார்வார் மாவட்ட போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். பச்சாகானும், பெண்ணும் கையும் களவுமாக சிக்கினர். அவர்களையும், 3 போலீசாரையும் அவர்கள் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.