படப்பிடிப்பில் ஆரத்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிரத்னம்- ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த தகவல்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான தகவல்களை நடிகை ஐஸ்வர்யா ராய் புரமோஷன் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் 4 நாட்களே இருப்பதால் படக்குழுவினர் சென்னை, பெங்களூரு என்று இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகள் ஆரத்யா மற்றும் கணவர் அபிஷேக் பச்சன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை நடிகை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “வரலாற்று படங்களை பார்ப்பது எப்போதுமே நமக்கு உற்சாகத்தை தரும். ஆரத்யாவும் இந்தப் படத்தால் மிகவும் உற்சாகத்துடன் இருந்தாள். மேலும் செட்டிற்குள் வந்து பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

image

அதைப் பார்த்ததும் அவள் மெய்சிலிர்த்து காணப்பட்டாள். அவள் கண்களில் நான் அதைக் கண்டேன். இயக்குநர் மணிரத்னத்துடன் நான் பணிபுரிவதை பாக்கியமாக கருதுகிறேன். ஆரத்யாவும் அவரை (மணிரத்னம்) மதிக்கிறார், அவரைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள். ஆரத்யா படப்பிடிப்பிற்கு வந்தபோது அவளை மிகவும் உற்சாகப்படுத்தியதாகவே நினைக்கிறேன், ஏனெனில் மணிரத்னம் ஆரத்யாவை ‘ஆக்ஷன்’ சொல்ல வாய்ப்பளித்தார்.

இதனைக் கேட்டு ஆச்சரியத்தில் அந்த விஷயத்தை அவளால் கடந்து செல்ல முடியவில்லை. மணிரத்னம் சார் எனக்கு ஆக்ஷன் சொல்லும் வாய்ப்பை கொடுத்தார் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நம்மில் யாருக்கும் அந்த மாதிரியான வாய்ப்பு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இந்த மாதிரியான வாய்ப்பு அவளுக்கு மிகவும் மறக்கமுடியாத நினைவாக இருக்கும். அவள் ஏற்கனவே மணிரத்னத்தை மதிக்கும் நிலையில், அவள் வளர வளர இன்னும் பெருமையாக இதனை நினைப்பாள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.