அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும்
ஆகியோரிடையே பகிரங்கமான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடையே வெட்டு, குத்து மட்டும் தான் ஆகவில்லை. அந்தளவுக்கு நிலமை விபரீதமாக போய் உள்ளதால் அதிமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக்கொள்வது? யாரை விலக்கி வைப்பது? என, புரியாமல் குழம்பி தவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை கையில் போட்டு கொண்டதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியது பொதுக்குழு.
இதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளார்.
அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுக்க உள்ள முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேருமே பாஜக மேலிடத்தையே நம்பி இருக்கின்றனர்.
அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் பாஜக விருப்பம் என பெரிதும் பேசப்படுகிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிப்பதால் பஞ்சாயத்து இழுபறியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் இருவருமே மோடியிடம் பேசி பிரச்சனைக்கு முடிவுகட்ட திட்டமிட்டனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
பாஜக சார்பில் கட்சியின் மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர். இவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியை சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேப்போல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இரண்டு பேரும் ஒன்றாக இன்று விமான நிலையத்தில் இருந்தனர். ஆனால் அருகருகே நிற்காமல் கொஞ்சம் தள்ளியே இருந்தனர்.
இவர்களுக்கு இடையில் சில அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். இதைக்கண்ட பிரதமர் மோடி தனித்தனியாக நின்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்ந்து வருமாறு அழைத்துள்ளார்.
இதையடுத்து வேறுவழியில்லாமல் இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றதாகவும் அதை மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி அழைத்து பேசுவார் என்கிற நம்பிக்கையுடன் இரு தரப்பினரும் காத்துக் கிடந்தனர். ஆனால், யாரையும் சந்திக்காமல் பிரதமர் மோடி திரும்பிவிட்டார்.
அதிமுக பஞ்சாயத்தை பிரதமர் மோடி முடித்து வைப்பார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ‘சேர்ந்து வாங்க’ என அழைத்த ஒற்றை உத்தரவே பாஜகவின் மறைமுக இறுதி தீர்ப்பு என அரசியல் விமர்சகர்கள் ஆருடம் சொல்கின்றனர்.