விபத்து இழப்பீடு வழக்குகளில் முறைகேடு; திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி டிஸ்மிஸ்: சென்னை ஐகோர்ட் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனாவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றியவர் எம்.கே.ஜமுனா. இவர், நீதிபதியாக பணியாற்றிய காலங்களில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்களை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதனை தொடர்ந்து, உடனடியாக மாவட்ட அமர்வு நீதிபதி பணியில் இருந்து கே.எம்.ஜமுனா விடுவிக்கப்பட்டார். மேலும், அவரது பொறுப்புக்களையும் உடனடியாக ஒப்படைத்தார். எனவே, நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எம்.கே.ஜமுனா பங்கேற்கவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிபதியாக ஜமுனா பணியாற்றிய காலங்களில், விபத்து வழக்குகளில் தவறுகள் நடந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே, இவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், திருவண்ணாமலையில் விபத்து வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் உள்ள நிலையில், அந்த வழக்குகளையும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றுதட நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட நீதிபதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, வக்கீகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.