அருவங்காடு வெடிமருந்து ஆலையில் மீண்டும் வெடி விபத்து

குன்னூர்: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 19ம் தேதி தொழிற்சாலையில் சிடி செக்சனில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த பிரிவில் 8 பேர் பணியாற்றியுள்ளனர். இதில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்நிலையில் மீண்டும்  நேற்று தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெல்டிங் பணியின்போது, குழாயில் இருந்த வெடிமருந்தில் தீப்பொறி பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட மனோஜ் (30), ஹிம்மான்சூ மன்லோய் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மனோஜ் என்பவருக்கு கை விரல்கள் துண்டானது. பலத்த காயமடைந்த இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.