இந்திய ராணுவத்தை நக்கலடித்த ஹிந்தி நடிகை : எதிர்ப்பு கிளம்பியதும் அடித்தார் அந்தர் பல்டி

மும்பை : இந்திய ராணுவத்தை நக்கலடிக்கும் விதமாக ஹிந்தி நடிகை ரிச்சா சதா பதிவிட்டது சர்ச்சையானது. பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் ரிச்சா.

பாலிவுட் நடிகை ரிச்சா சதா. ‛ஹேங்ஸ் ஆப் வசிப்பூர், புக்ரே, 3 ஸ்டோரீஸ், ஷகீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‛‛பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாக திரும்ப பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்களது பதில் வேறுமாதிரி இருக்கும்'' என வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதை ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை ரீ-டுவீட் செய்த நடிகை ரிச்சா, ‛‛கல்வான் ஹாய் சொல்கிறது'' என பதிவிட்டார். அதாவது கல்வானில் சீனா ராணுவம் நுழையும் என்பது போன்று அவரது பதிவு நக்கலாக இருந்தது. இவரது இந்த பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ராணுவ வீரர்கள் எல்லையில் நாட்டைக்காக போராடி வருகிறார்கள். அதே கல்வான் தாக்குதலில் இந்திய வீரர்களின் உயிர் தியாகம் நிகழ்ந்தது. நாட்டுக்காக வீர மரணம் அடைந்தவர்களை இப்படி நக்கல் செய்வது போன்று ரிச்சா பதிவிட்டுள்ளாரே என சமூகவலைதளங்களில் பலரும் அவரை வசை பாட தொடங்கினர். பலரும் அவரை தாறுமாறாக டிரோல் செய்தனர். இதனால் தனது சமூகவலைதள பக்கத்தை லாக் செய்தார் ரிச்சா. இருந்தாலும் அவருக்கான கண்டனங்கள் குறையவில்லை. பலரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பதிவிட்டனர்.

இதனால் பதறிபோன ரிச்சா உடனடியாக தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களும் ராணுவத்தில் இருந்தவர்கள். ராணுவம் எனது ரத்தத்திலே உள்ளது'' என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.