சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி உள்ளிட்ட பலர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஓட்டுநராக பணியாற்றிதாக கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டுநர் சுதாகர் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் லெவல் ஒன்று முதல், லெவல் நான்கு வரையிலான பணிகளுக்கும், கிராம நிர்வாக செயல்அலுவலர் பணிகள் ஆகியவற்றை வாங்கி தருவதாக கூறி ரூபாய் மூன்று லட்சம் முதல் 8 லட்சம் வரை ஒவ்வொருவரிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் அரசு வேலை கிடைத்தது போன்று போலி நியமன ஆணை தயாரித்து பணம் பெற்றவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று கேட்டபோது, அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்துள்ளதாக கூறினர்.
தமிழ்நாடு முழுவதும் சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் ஒரு கோடிக்கு மேலாக பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி சுதாகரிடம் நேரில் சென்று கேட்டபோது, கொலை மிரட்டல் விடுவதாகவும், தகாத வார்த்தைகள் திட்டுவதாக குற்றம்சாட்டினர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து சுதாகர் அவரது மனைவி பிரபாவதி, உறவினர் மகேஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்பி. வேலுமணியின் மீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்