ஆசிய கோப்பைக்காக இந்தியா வரவில்லை என்றால், பாகிஸ்தான் இல்லாமல் உலகக் கோப்பை நடைபெறும் – ரமீஸ் ராஜா

கராச்சி,

இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை எனில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாங்கள் அதிரடியான அனுகுமுறையை கடைபிடிப்போம். ஏனெனில், எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அது நடக்கும்.

2021 டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி உள்ளோம். எனவே நாங்கள் உறுதியாக உள்ளோம் பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி பங்கேற்கவில்லை எனில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அந்த ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி கைப்பற்றி உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? இல்லையா? என்பதை இந்திய அரசாங்கம் தான் முடிவு செய்யும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.