உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நட்சத்திர அணிகள் எல்லாம் அதிர்ச்சி தோல்வி அடைகின்றன. அந்த வகையில் அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவியது.
ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆனால் இரண்டாம் பாதியில் ஆட்டமே மாறியது. 47ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி ஒரு கோலும், 52ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி மற்றொரு கோலும் அடித்தனர்.
பின்னர் அர்ஜென்டினா அணியால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில் சவுதி அரேபியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் நாடே வெற்றியில் திளைத்தது.
வெற்றியை நாடே கொண்டாட வேண்டும் என பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சவுதி அரேபிய அரசு ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தது. மேலும் சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்ததாக தகவல் பரவியது.
இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலை சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி மறுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுகிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்த தகவலே பொய்யானது என்று சவுதி அரேபியா கால்பந்து வீரர் அல் ஷெக்ரி மறுத்துள்ளார். தங்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், சிறந்ததைச் செய்யவுமே வந்துள்ளோம், அதுவே மிகப்பெரிய சாதனை என்று அவர் கூறினார்.
newstm.in