தமிழ்நாடு இல்லத்தில் போலி அதிகாரி தெலுங்கானா அமைச்சருக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் போலி சி.பி.ஐ., அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலுங்கானா அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

புதுடில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு கடந்த 22ம் தேதி வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவர், தான் சி.பி.ஐ.,யில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்தி அறை எடுத்து தங்கினார்.

அங்கிருந்து சிலரிடம் போனில் பேசிய ராவ், சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக முடித்து தருவதாகவும், இதற்காக அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தர வேண்டும் எனவும் பேரம் பேசினார்.

இந்த தகவலை மோப்பம் பிடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 27ம் தேதி நள்ளிரவில் தமிழ்நாடு இல்லத்துக்குள் அதிரடியாக புகுந்து, ஸ்ரீனிவாச ராவை கைது செய்தனர். அவரிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கங்குலா கமலாகர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., வாட்டிராஜு ரவிச்சந்திரா ஆகியோருக்கு நேற்று சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.

இருவரும் புது டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் இன்று ஆஜராகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.