சீனாவுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும்: இலங்கை எம்.பி எச்சரிக்கை

கொழும்பு,

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன். இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுடன் உண்மையிலேயே நிற்க விரும்பினால் கடன் மறு சீரமைப்பு செயல் முறைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளை சீனா முடக்கியது என்று தெரிவித்தார். இதற்கு இலங்கையில் சீன தூதரகம் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டது. இந்த நிலையில் இலங்கையில் சீனாவுக்கு எதிரான போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சாணக்கியன் ராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘சீனா கோ ஹோம்’ (சீனா வெளியேறு) போராட்டம் விரைவில் தொடங்கப்படும். அதற்கு நான் தலைமை தாங்குவேன். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை அறிந்துள்ள சீனா கடன் பொறிக்குள் சிக்க வைக்கிறது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.